உக்ரைன் மீதான யுத்தத்தை ரஷ்யா ஆரம்பித்தது முதல் இதுவரை 11,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரேன் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
நேற்று 10,000 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட 11 ஆவது நாளான இன்று 11,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேனிய ஆயுதப்படைகளின் ஜெனரல் கூறியுள்ளார்.
எனினும் தனது படைகளின் உயிரிழப்புகள் குறித்த தகவல்களை உக்ரைன் வெளியிடவில்லை.
இதேவேளை, போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகள் 88 விமானங்கள் மற்றும் ஹெலிகப்டர்களை இழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், பல ரஷ்ய விமானிகள் உயிருடன் பிடிபட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கிய்வ் வடமேற்கே இர்பான் என்ற நகரத்தில், ஹோஸ்டோமெல் விமானதளத்திற்கு அருகே இன்றும் கடுமையான சண்டை நடந்து வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடுவதற்காக நடந்தே அந்தப் பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
உக்ரைன் கிழக்கில் கார்ஹிவ் மற்றும் சுமி நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
டான்பாஸ் பகுதியில் பல சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களைக் கைப்பற்றியவாறு 7 கிலோ மீட்டருக்கு முன்னேறியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.